தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

துரோகிகளை இனம் கண்டு கொள்வோம்!
போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

மு.சண்முகம்
பொதுச்செயலாளர்,
தொ.மு.ச. பேரவை

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் அவர்களுடைய ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த தொகை ரூ.7000 கோடியை எடுத்து கடந்த 6 ஆண்டுகளாக போக்குவரத்துக் கழகத்தை அ.தி.மு.க. அரசு நடத்தி உள்ளது. அதன் உட்பொருள் தொழிலாளர்களின் அனுமதி இல்லாமல் ரூ.7000 கோடியை எடுத்து நிர்வாகங்கள் கையாடல் செய்துள்ளது. ஆனால் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கவனக் குறைவாக 10 பைசா வசூல் தொகையில் குறைந்தால் அவர்களை பணக்கையாடல் என்னும் பெயரில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வீட்டிற்கு அனுப்புகிறார்கள். நிர்வாகம் செய்த கையாடல் எப்படி ஏற்பட்டுள்ளது? அதற்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம் என்பதை கீழ்க்கண்டவாறு காணலாம்.

2001 ஆம் ஆண்டில் சர்வாதிகார ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்தவுடன் போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்க முயற்சி எடுத்து சரிபாதி பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்க அரசாணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்று தொழிற் சங்கங்கள் தடையாணை பெற்றார்கள். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 20 சதவிகிதம் போனஸ் பெற்று  வந்தார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அதனை 8.33 சதவிகிதமாக குறைத்து அறிவித்தார்கள். தாங்கள் பெற்று வந்த உரிமைகளை மீட்க தொழிலாளர்கள் 17 நாட்கள் போராடினார்கள். 60 ஆயிரம் பேர் சிறை சென்றார்கள். 5000 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டார் கள்.

பல்லாயிரக்கணக்கானோர் ஊர் மாற்றம், பதவி இறக்கம், பணி மாற்றம் செய்யப்பட்டார்கள். ஆண்டு ஊதிய உயர்வு, ஆய்வு பலன், பதவி உயர்வை இழந்தார்கள். ஒவ்வொரு தொழிலாளியும் சுமார் ரூ.90,000 வரை இழந்தார்கள்.

எஸ்மா, டெஸ்மா எனும் கொடுஞ் சட்டங் களைக் கொண்டு வந்து தொழிலாளர்களை பழி வாங்கினார்கள். எதற்கும் அசைந்து கொடுக்காத போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் போர்க் குணமும், தொழிற்சங்கங்களின் சாதுர்யமும், போக்குவரத்துக் கழகங்களை அந்த கொள்ளை கும்பலிலிருந்து காப்பாற்றி வந்தார்கள்.

போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்கு விற்க முடியவில்லை. சலுகைகளை குறைத்தாலும், ஊதியத்தை வழங்க மறுத்தாலும் போக்குவரத்துக் கழகங்களை தங்கள் சொந்த கழகமாக கருதி செயல்பட்டு வந்தனர். போக்குவரத்துக் கழகங்களிலுள்ள தொழிற்சங்கங்களின் செயல்பாட்டினை தனக்கெதிராக ராஜ்ஜியம் நடத்துவ தாகக் கருதிய ஜெயலலிதா அடுத்த முயற்சியாக போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகள் வாங்குவதை நிறுத்தினார். உதிரி பாகங்கள் வாங்குவதையும் நிறுத்தினார். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்குப் பதிலாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதையும் நிறுத்தி விட்டார். இதனால் 17,000 பேருந்துகள் என்பது 13,000 பேருந்துகள் மட்டும் ஓடின. அதில் பெரும் பகுதி பேருந்துகள் பழுதடைந்து வழியெல்லாம் பழுதாகி நிற்கத் தொடங்கின. பழுது பார்க்கும் தொழிலாளர்கள் இல்லாததால் பேருந்தின் நிலை முற்றிலும் மோசமடைந்தது. 5 ஆண்டுகளில் 25,000 தொழிலாளர்களின் எண்ணிக்கை ஓய்வு பெற்றதால், விருப்ப ஓய்வு பெற்றதால், இறந்தவர்கள் காரணமாக குறைந்தது. புதிய பணியாட்களை எடுக்கவில்லை. இவை அனைத்தும் போக்குவரத்துக் கழகத்தை தானாக முடக்கும் சதிச் செயலை (Grint to halt)  ஜெயலலிதா செய்தார்.
2006 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்று ஆட்சியை விட்டு இறங்கும்போது பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் கடந்த 5 ஆண்டுகளில் தங்களால் நிறைவேற்ற இயலாத பிரச்சினைகள் எது என கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு விற்க முயற்சித்தேன். ஆனால் அதனை தொழிற்சங்கங்கள் தடுத்து விட்டன. அதுதான் நான் நினைத்து நிறைவேறாதது எனக் கூறினார்.

ஒட்டுமொத்தமாக போக்குவரத்துக் கழகத்தை அழிக்க முடியவில்லையே என்ற ஏக்கத் தோடு ஆட்சியை விட்டு வெளியேறினார்.
ஜெயலலிதா ஆட்சியில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு 1.9.2001 முதல் வழங்கப்பட வேண்டும். ஆனால் 3 ஆண்டு ஒப்பந்தத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்தார். 1998 ஆம் ஆண்டு ஒப்பந் தத்தை தன்னிச்சையாக 5 ஆண்டுகள் நீட்டித்து 1.9.2003 முதல் வழங்க வேண்டிய ஊதியத்தை
1.9.2005-ல் ஒப்பந்தம் செய்து அந்த ஒப்பந்தத்தை 5 ஆண்டுக்கான ஒப்பந்தமாக தனக்கு வேண்டிய சங்கங்களை வைத்து கையொப்பமிட்டு 4 ஆண்டுகளுக்கு எந்தவித பலனும் இல்லாமல் தொழிலாளர்கள் உரிமைகளை தன்னிச்சையாகப் பறித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை ஜெயலலிதா நடத்தினார்.

போக்குவரத்துக் கழகத் தொழி லாளர்கள் 1972ஆம் ஆண்டு அரசுத் துறையில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட போக்குவரத்துக் கழகமெனும் பொதுத்துறை நிறுவனத்திற்கு விரும்பம் தெரிவித்து வந்தனர். அவர்களுக்கு அரசுத் துறையில் குறிப்பாக, ஓட்டுனர், நடத்துனர், தொழில் நுட்ப பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. அரசுத் துறையில் இருந்து வந்தவர்களுக்கு தலைவர் கலைஞர் அரசு அரசாணை 378, 1975-ல் பிறப்பித்து, அதன்படி அரசுத் துறையில் பணியாற்றிய காலத்திற்கு ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்யப்பட்டது.

போக்குவரத்துக் கழகத்தில் ஆயிரக் கணக்கில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் ப யில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரை பதவி உயர்வு இல்லாமல் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல திட்டத்தை உருவாக்க வேண்டி அன்று இருந்த போக்குவரத்து துறை அமைச்சரை ஜப்பானுக்கு அனுப்பி அவர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் (longevity pay scheme) 1975 நீண்ட கால ஊதிய திட்டம் என்னும் பெயரில் கொண்டு வரப்பட்டது. இதனை ஜப்பான் திட்டம் என்பார்கள். அதாவது, ஊழியர்கள் அவரவர்கள் செய்யும் பணி எவ்வித மாற்றமும் இல்லாமல் இருக்கும். ஆனால் அவர்களுடைய  பணிக் காலத்திற்கு ஏற்றவாறு பதவி உயர்வு கிடைக்காமல் போனாலும் அதற்கு ஈடான பணப் பலன்கள் கிடைக்கும் திட்டத்தை தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார். இத்திட்டத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதி உள்ளவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தொடர்ந்து ஓய்வூதியத் திட்டத்திற்கு போராடி வந்தார்கள். கழக ஆட்சிக் காலத்தில் 1999 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் 1.9.98 முதல் ஓய்வூதிய திட்டம் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்காக கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் 1.9.98க்கு முன் உள்ளவர்கள் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து அனைவரும் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்தனர். 1.9.98க்குப் பிறகு வரக் கூடிய தொழிலாளர்கள் கட்டாயமாக இத்திட்டத்தில் சேர்ந்து தங்கள் பங்கை செலுத்தி ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள வும் வழி செய்யும் சரத்துக்களுடன் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

31.8.1998 வரை போக்குவரத்துக் கழகத்தில் செயல்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டது. அத்திட்டத்தில் செலுத்தப்பட்ட தொழிலாளர் பங்கு வருங்கால வைப்பு நிதி 12 சதவிகிதத்தை வருங்கால வைப்பு நிதியாகவும், நிர்வாகத்தின் 12 சதவிகித பங்கை ஓய்வூதிய திட்டத்திற்கு எடுத்துக் கொள்வதென முடிவு எடுக்கப் பட்டது. இதற்கென போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஓய்வூதிய நம்பகம் ஒன்று துவங்கப் பட்டது. இந்த நம்பகத்தின் மூலமாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த நம்பகத்திற்கு வருமான வரி விலக்கு கேட்டு விண்ணப்பித்த மனுவை 2001 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசு தொடர் முயற்சி செய்யாமல் அலட்சியப்படுத்தியதால் வருமான வரி விலக்கு பெறாமல் ஓய்வூதிய நம்பகம் வெறும் பெயரளவில் நடை பெற்றது.

ஓய்வூதிய பங்குத் தொகைகள் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களிலேயே தனி நிதியாக வைக்கப்பட்டு அதில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் ஜெயலலிதா அரசு திடீரென ஓய்வூதியத்தை நிறுத்தியது. ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று  ஓய்வூதியம் வழங்க வேண்டுமென உத்தரவை பெற்ற பின் ஓய்வூதியம் தொடரப்பட்டது. அ.தி.மு.க. வின் 5 ஆண்டுகால அலட்சியத்தால் ஓய்வூதிய பங்குத் தொகைகள் முறைப்படுத்தி கணக்குகள் பராமரிக்கப் படாததால் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

மீண்டும் கழக ஆட்சி தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 2006 ஆம் ஆண்டில் மலர்ந்தது. போக்குவரத்தை மேம்படுத்த 13,000 புதிய பேருந்துகள் வாங்கியது, 46,000 தொழிலாளர் களை பணியில் அமர்த்தியது, 2 முறை ஒப்பந்தங்கள் மூலம் சிறப்பான ஊதிய உயர்வு அளித்தது, போனஸ் தொகையை உயர்த்தி தந்தது போன்ற அனைத்திற்கும் அரசின் நிதி உதவிகள் செய்து போக்குவரத்துக் கழகத்தை காப்பாற்றினார்.  அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 8.33 சத விகிதமாக குறைக்கப்பட்ட போனசை தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில் 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. மத்தியில் போனஸ் சட்டம் திருத்த முன்வடிவு கொண்டு வந்த வுடன் தமிழகத்தில் 20 சதவிகித போனஸ் ரூ.6000 என்பது ரூ.8400 ஆக உயர்த்தி வழங்கினார். 5 ஆண்டு என்று நீட்டித்த ஒப்பந்த காலத்தை 3 ஆண்டு என்று குறைத்தார். அதன்படி 1.9.2007-ல் ஊதிய உயர்வாக 12 சதவிகிதமும், 1.9.2010-ல் 52 சதவிகித ஊதிய உயர்வும், அரசு ஊழியர் களுக்கு இணையான பஞ்சப்படி, மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு 3 சதவிகிதம், ஆய்வு பலனை 5 ஆக உயர்த்தியும் வழங்கப்பட்டது. இதற்கான கூடுதல் செலவு ரூ.1000 கோடியை போக்குவரத்துக் கழகத்திற்கு அரசின் சார்பில் நிதியாக வழங்கினார்.

அ.தி.மு.க. அரசு ஓய்வூதிய நிதிக்கான வருமான வரி விலக்கு பெறுவதில் அலட்சியம் காட்டியதால் ஏற்பட்ட தடைகளை தொடர்ந்து மத்திய அரசுடன் போராடி இறுதியாக நீதிமன்றத் திற்குச் செல்வோம் என்ற எச்சரிக்கை தி.மு.க. அரசு விடுத்தபிறகு 1.10.2010-ல் வருமான வரிவிலக்கு பெற்றது. தி.மு.க. ஆட்சி எஞ்சி இருந்த குறைந்த காலத்தில் பல்வேறு இனங்களில் இருந்த ஓய்வூதிய தொகைகளை நம்பகத்திற்கு மாற்றங்கள் செய்ய அரசாணை பிறப்பித்தது. முழுமையாக செய்து முடிப்பதற்குள் ஆட்சி பறி போய்விட்டது.

மீண்டும் 2011-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தன்னுடைய வன்மத்தை போக்குவரத்துக் கழகங்கள் மீது காட்டத் துவங்கினார். போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் நடத்திற்கு அரசு பொறுப்பேற்க மறுத்தது. இதனால் நாளொன்றுக்கு 8 கோடி நட்டம் ஏற்பட்டது. அதில் ஏதோ 3 கோடி டீசல் மானியம் கொடுப்ப தாக அறிவித்து அதனையும் முழுமையாக வழங்க வில்லை. ஒட்டுமொத்தமாக 1 கிலோ மீட்டர் பேருந்து ஓடினால் செலவு ரூபாய் 30. வரவு ரூபாய் 22. இந்த இடை வெளி நாளொன்றுக்கு ரூ.8 கோடி ஆகும். ஆண் டொன்றுக்கு 2000 கோடி வீதம் 5 ஆண்டுகால ஆட்சியில் 10 ஆயிரம் கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 22 ஆயிரம் பேருந்துகளில் 13000 பேருந்துகள் நகர பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. அப்பேருந்து களின் சராசரி வருமானம் ரூபாய் 3000 லிருந்து ரூபாய் 5000 வரைதான். ஆனால் அதற்கு ஆகும் டீசல் மற்றும் இதர செலவுகள் ரூபாய் 3,600. இதற்கு மேல் ஊதியச் செலவுகள் ஆக மொத்தம் குறைந்த கட்டணத்தில் இயக்கக் கூடிய அனைத்து பேருந்துகளும் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.5.5 லிருந்து ரூ.8 வரை நட்டத்தில் இயங்கி வருகிறது. இதுபோல நல்ல வருவாய் ஈட்டக் கூடிய பேருந்துகளை கூட நிர்வாகத்திறமை இன்மையால் வேண்டுமென்றே கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் என்ற ஒரு தவறான பார்வையோடு பல பேருந்துகள் பயணிகள் இல்லாமல் இயக்கப்படுகின்றது. இதற்கு அரசியலும் ஒரு காரணம். இந்த சூழலில் போக்குவரத்துக் கழகத்தை ஒவ்வொரு தொழிலாளியும் தான் ஈட்டுகின்ற வருவாயில் 40 சதவிகிதம் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒப்படைத்து விட்டு ஓய்வு பெறும் காலத்தில் ஒன்றும் இல்லாமல் தெருவில் நிற்கக் கூடிய சூழல் ஏற்படுகிறது.
அ.தி.மு.க. அரசு கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தொழிலாளி பணத்தை கொண்டு போக்குவரத்துக் கழகங்களை நடத்தி மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று பெருமிதப்பட்டுக் கொண்டு, தொழிலாளி பணத்தை திரும்ப கொடுக்க வாய்தா வாங்குவது, தவணை முறையில் தருவோம் என்பது போன்ற கொடுமைகள் நாட்டில் எந்த நிறுவனத்திலும் கிடையாது.

போக்குவரத்துக் கழகத்தை லாபகரமாக நடத்த வேண்டும் என்றால் நட்டத்தில் இயங்கும் பேருந்துகளையும், வருவாய் ஈட்டாத தடங்களையும் மக்கள் சேவைக்காக செல்லும் பேருந்து களையும் நிறுத்தி விட்டு எங்கு வருவாய் வருகிறதோ அங்கு மட்டும் போக்குவரத்துக் கழகத்தை இயக்கி லாபத்தை காட்ட இந்த அரசு முன் வருவதற்கு தயாரா? இதனால் ஏற்படும் மக்கள் பிரச்சினைகளை சந்திக்க தயாரா? மக்களை சந்திக்கவும் முடியாது, பிரச்சினைகளை தீர்க்கவும் முடியாது, ஏமார்ந்த போக்குவரத்துத் தொழிலாளியின் உழைப்பை சுரண்டி அவர்கள் பணத்தைக் கொண்டு மக்கள் சேவை செய்கிறோம் என்று மார் தட்டிக் கொள்ளும் இவர்களுக்கு வெட்க மில்லை.

ஓய்வூதியப் பிரச்சினைகள்

போக்குவரத்துக் கழகம் என்பது கம்பெனி சட்டம் 1956-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனம். இதேபோல் தமிழகத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம், திருச்சி பெல், சேலம் எஃகாலை, தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு காகித ஆலை, சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலை கள் மற்றும் தனியார் ஆலைகள், நிறுவனங்கள் அனைத்தும் தொழிலாளர் வைப்பு நிதி, மற்றும் பணிக்கொடை சட்டத்தின் கீழ் உட்பட்டதாகும்.

தொழிலாளர் வைப்பு நிதி 12 சதவிகிதம், நிர்வாகத்தின் பங்கான 12 சதவிகிதத்தில் 8.33 சதவிகிதத்தை ஓய்வூதிய பங்காகவும் எடுத்து அத்துடன் அரசு 1.16 சதவிகிதத்தை சேர்த்து அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்குகிறார்கள். நிர்வாகத்தின் பங்கான 12 சதவிகிதத் தில் 8.33 சதவிகிதம் ஓய்வூதியத்திற்கு போக மீதமுள்ள 3.67 + தொழிலாளர் பங்கான 12 சதவிகிதத்தையும் சேர்த்து வைப்பு நிதியாக ஓய்வு பெறும் காலத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன் பணிக் காலத்திற்கான பணிக்கொடை வழங்கப்படுகிறது. இது அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்கு சட்டப்படி பொருந்தக்கூடிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களாகும். இத்திட்டத்தில் ஒரு பகுதியான நிர்வாக வைப்பு நிதி பங்குத் தொகை 12 சதவிகிதத்தை முழுமையாக போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தங்களுடைய ஓய்வூதிய திட்டத்திற்காக செலுத்தி அதற்கென ஒரு நம்பகத்தை உருவாக்கி அதில் தொழிலாளர்களும் பிரதி நிதிகளாக இருந்து அதனை முழுமையாக நிர்வகித்து ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த நிதியில் ஏதேனும் பற்றாக்குறைகள் இருக்குமேயானால் அந்த ஓய்வூதிய நம்பகம் அமர்ந்து பேசி அக்குறைகளை எவ்வாறு தீர்ப்பது என்ற முடிவுகள் மேற்கொள்ளவும் அதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு ஊழியர்களுக்காக புதிய ஓய்வூதிய திட்டத்தை 1.4.2003-க்குப் பிறகு கொண்டு வந்தார்கள். அதன்படி 2003-க்குப் பிறகு பணிக்கு வரக்கூடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 10 சதவிகி தத்தை தங்கள் ஊதியத்தில் இருந்தும், 10 சதவிகிதத்தை அரசும் செலுத்தி மொத்தம் 20 சதவிகிதத்தை ஏதோவொரு நிறுவனங்களில் முதலீடு செய்து அதில் இருந்து வரக்கூடிய தொகைகளை கொண்டு ஓய்வூதியம் வழங்க புதிய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசு 1.1.2004 முதல் கொண்டு வந்ததை அவசர அவசரமாக ஜெயலலிதா அரசு 1.4.2003 முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆணை பிறப்பித்தது. இந்த திட்டத்திற்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால் அரசு ஒரு தவறான முடிவெடுத்து அரசு ஊழியர்களைப் போலவே போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் 1.4.2003-க்குப் பின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை தொழிற் தகராறு சட்டம் 1947 பிரிவு 12(3)ன் கீழ் 1.9.98 முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள், நிர்வாகம், தமிழக தொழிலாளர் துறை ஆகிய முத்தரப்பினர் செய்த ஊதிய ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும். ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தை அந்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கு அரசு ஆணை போட்டு மாற்ற இயலாது. மீண்டும் தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசித்தான் எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட வேண்டும். அப்படி எடுத்தாலும் அவர்களுக்கு மீண்டும் வைப்பு நிதி சட்டத்தின் கீழ்தான் ஓய்வூதிய திட்டம் கொண்டு வர முடியுமே தவிர, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கொண்டு வர அரசாணை பிறப்பித்தது சட்ட விரோதமாகும்.

அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களைப் போலவே போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கும் பணிக்கொடை கிடையாது. வைப்பு நிதி கிடையாது என்று தன்னிச்சையாக அறிவித்திருப்பதும் சட்டவிரோதமாகும். புலி வாலைப் பிடித்த நாயரைப் போல தவறான செயலில் ஈடுபட்டுள்ள நிதித்துறை, போக்குவரத்துத் துறை, சிவில் சர்வீஸ் அதிகாரிகள் தங்கள் தவறை திருத்திக் கொள்வதற்கு பதிலாக இதனை நியாயப்படுத்துவது, தொழிலாளர்களுக்கு இழைக்கப் படும் பெரும் துரோகமாகும். இந்த அதிகாரிகள் எடுக்கின்ற முடிவில் 1.4.2003-க்குப் பிறகு பணியில் அமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு பணிக்கொடை இல்லை, வைப்பு நிதி இல்லை என்ற ஏமாற்றத்தை கொடுக்க இவர்களுக்கு யார்? அதிகாரம் கொடுத்தார் கள். இவர்கள் திட்டப்படி 1.4.2003-க்கு முன்னால் பணியில் உள்ளவர்கள் தொடர்ந்து ஓய்வு பெற்று அதனால் அவர்களுடைய பங்களிப்பு குறையும்போது, ஏறத்தாழ ஒன்னேகால் லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை யார் வழங்கப் போகிறார்கள்? வழங்காவிட்டால் தொழிலாளர் களுடைய வெறுப்பும் அதிருப்தியும் அரசுக்கு ஒரு சவாலாக உருவாகும் என்பதை ஏன் உணர வில்லை? எடுத்த முடிவை நாங்கள் மாற்ற மாட்டோம், யார் எக்கேடு கெட்டால் என்ன? என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்யும் துரோகத்தை தட்டிக் கேட்க, இந்த அரசுக்கு திராணி இல்லை. எனவே, ஒட்டுமொத்த தொழிலாளர்கள் எங்களுடைய உரிமைகளைப் பறிப்பதற்கு  நீ யார்? நாங்கள் செய்த ஒப்பந்தத்தை திருத்துவதற்கு நீ யார்? எங்களுக்கு பணிக்கொடை இல்லை என்று சொல்வதற்கு நீ யார்? எங்களுக்கு வைப்பு நிதி இல்லை என்று சொல் வதற்கு நீ யார்? எங்கள் ஓய்வூதிய திட்டத்தை சிதைப் பதற்கு நீ யார்? இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் எந்த ஒரு தொழிற்சங்கமும் ஒப்பந்தம் செய்யுமேயானால் அந்த தொழிற்சங்கத்தை போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனுமதிப்பார்களா? அப்படி கையெழுத்து போடுபவர்கள் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்கின்ற கருங்காலிகள் அல்லவா? தொழிலாளிகள் துரோகிகளை இனம்  கண்டு கொள்வோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

7th cpc - cabinet aproves(கேபினெட் அமைச்சரவையால் ஏற்று கொள்ளபட்டவை)